நிரவ் மோடி ஜாமீன் கேட்டு பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு

13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டன் ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூன் 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
நிரவ் மோடி ஜாமீன் கேட்டு பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு
Published on

லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.   

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரது ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. 

இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை ஜூன் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பிரிட்டன் ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் இன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீது ஜூன் 11-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com