நிபா வைரஸ் பாதிப்பு- திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 6 படுக்கை வசதியுடன் தனி பிரிவு

நிபா வைரஸ் பாதிப்பு முன்னெச்சிரிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 6 படுக்கை வசதியுடன் தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டை மருத்துவத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டை மருத்துவத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.
Published on

திண்டுக்கல்:

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் ‘நிபா’ வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.

தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் பல்வேறு பணி காரணமாக தினசரி கேரளா சென்று வருகிறார்கள். அவர்கள் மூலம் இந்த காய்ச்சல் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு உள்ளது.

இதனால் கேரள மாநிலத்தையொட்டி உள்ள கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி, ஊட்டி, திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களின் எல்லைகளில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து வரும் பஸ், கார், வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களில் வருபவர்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 படுக்கை வசதியுடன் கூடிய தனி சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

‘நிபா’ வைரஸ் பாதிப்புக்கான தனி சிகிச்சைப் பிரிவில், முகமூடியுடன் கூடிய முழு பாதுகாப்பு ஆடை 14 தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருமி நாசினி கலந்த தண்ணீர், அந்த சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே தயாராக வைக்கப்பட்டுள்ளது.

‘நிபா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை பார்வையிட செல்லும்போதும், திரும்பி வந்தவுடனும் இந்த கிருமி நாசினி தண்ணீரால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செலிவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு 1 நாள் அல்லது 2 நாள் இருந்தால் கூட தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சித்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நலப்பணி இணை இயக்குநர் மாலதி பிரகாஷ், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் குணசேகரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com