

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்போதே அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். வருகிற 31-ந்தேதி அவர் தனது பதவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.
இந்நிலையில் உலக வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர்.
இதுகுறித்து கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “உலக வங்கி தலைவர் பதவிக்காக குறிப்பிடத் தகுந்த எண்களில் பரிந்துரைகள் வந்துள்ளன. தகுதியின் அடிப்படையில் அமெரிக்க வேட்பாளர் ஒருவரை தலைவராக தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
உலக வங்கி தொடங்கப்பட்டது முதல், அதன் தலைவர்களை அமெரிக்கா தான் தேர்வு செய்து வருகிறது. இது எழுதப்படாத விதியாக உள்ளது. உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குவதே இதற்கு காரணம்.