

சென்னை:
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை கிடைக்காததால் இலங்கை சென்று கொழும்பில் கை வரிசை காட்டி உள்ளனர். என்றாலும் இலங்கையில் உள்ள ஐ.எஸ். ஆதரவு நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்கள் உதவிகள் செய்து இருப்பது தெரிய வந்தது.
எதிர்காலத்தில் இந்தியாவிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளை வேரோடு வேராக அழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)க்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், “பேன் இந்தியா ஆபரேஷன்” என்ற திட்டத்தை வகுத்தனர். முதல் கட்டமாக இலங்கை சென்று ஆய்வு செய்தனர். அப்போது இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகளுக்கும், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தீவிர விசாரணையில் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பல தடவை வந்து சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தகவல்களின் அடிப்படையில் கேரளாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி 6 பேரை கைது செய்தனர். கோவையில் 4 பேர் பிடிபட்டனர். அவர்கள் தனி இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது திருச்சி, சென்னையில் உள்ள சிலரும் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தினார்கள். சென்னை பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மூலம் இலங்கை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்தது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு தொழில் அதிபர் வீட்டில் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
கடந்த 2 மாதங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்த தகவல்களில் சென்னையில் உள்ள சிலர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். மணலி லிங்கிசெட்டி தெருவில் வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற புதிய அமைப்பு ஒன்று உள்ளது. இன்று காலை அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த அமைப்பு கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
சென்னையில் இருப்பது இதன் கிளை அலுவலகம் ஆகும். இங்கு சட்டம்- ஒழுங்கை மீறும் வகையில் ஏதேனும் உள்ளதா? என்று அதிகாரிகள் நீண்ட நேரம் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்று தெரியவில்லை.
வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில தலைவராக சையது முகமது புகாரி என்பவர் இருந்து வருகிறார். வேப்பேரியில் உள்ள இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா? என்று தெரியவில்லை.
இதற்கிடையே நாகையில் சிக்கல், மஞ்சகொல்லை ஆகிய இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அசன்அலி, ஹாரீஸ்முகமது ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இன்று சென்னை, நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.
வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் செயல்படும் அமைப்பு அல்ல. கேரளாவில் இந்த அமைப்புக்கு நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீண்ட நாள் கண்காணித்து அதிரடி சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தத்கது.
வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புக்கும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலும் இன்றைய சோதனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.