ஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சைபராபாத் பகுதி போலீசார் நேற்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.
எரிந்த பிரேதம் மீட்கப்பட்ட பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள்? என்பதை குற்றவாளிகள் நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
ஐதராபாத் போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் தொடர்பாக தாமே முன்வந்து விசாரணை செய்வதற்கு முன்வந்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்துக்கு ‘உண்மை கண்டறியும் குழுவை’ அனுப்பி வைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தது.

