ராசிபுரத்துக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
ராசிபுரத்துக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் - அமைச்சர் சரோஜா தகவல்
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் செயல்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளார். இந்த புதிய குடிநீர் திட்டத்திற்காக அரசராமணி கிராமப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த புதிய குடிநீர் திட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், புதுச்சத்திரம் யூனியன் பகுதிகளும் பயன்பெறும். இதைத் தவிர ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விடுபட்ட கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.

முதல் அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படியும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com