

நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தேர்தல் செலவு ஆய்வாளரிடம் ஏற்கனவே வேட்பாளரிடம் வழங்கப்பட்ட தேர்தல் செலவு விவரப்பதிவேட்டில் பதிவு செய்து தேர்தல் பிரசார காலத்தில் குறைந்தது 3 முறை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி வருகிற 7-ந்தேதி, 11-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக அறையில் ஆய்வு நடத்தப்படும்.
வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய முகவர்கள் வேட்பாளர் செலவு கணக்கை தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளர் பெயரில் தேர்தல் செலவுக்கென தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், காசோலை புத்தகம், வங்கி பதிவேடு, அன்றாட கணக்குப்பதிவேடு சுருக்க அறிக்கை மற்றும் செலவு செய்த வகைக்கு ஆதாரமாக பற்றுச்சீட்டு, ரசீதுகள், ஒப்புகைகள் ஆகியவற்றையும், அதன் நகல்கள் இரண்டும் தேதிவாரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு ஆஜராகி தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலும் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.