

திருவனந்தபுரம்:
கேரள சட்டசபையின் வைரவிழா நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். ‘ஜனநாயக திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி சில நாட்களுக்கு நடக்க உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, அம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் கொலைகள் குறித்து வேதனை தெரிவித்தார்.
‘விவாதங்கள், பரஸ்பர மரியாதை, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் குணம் ஆகியவை கேரள சமூகத்தின் அடையாளம் ஆகும். ஆயினும் கூட, கேரளாவின் சில பகுதிகளில் நடக்கும் அரசியல் வன்முறை முரண்பாடாக உள்ளது. இந்த அரசியல் வன்முறைகள் துரதிர்ஷ்டவசமானது. நம்முடைய அரசியல் சாசனத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை’ என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பங்கேற்று பேசினர்.