பாராளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த விரைவில் மசோதா - பாரதீய ஜனதா தலைவர் தகவல்

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் கூறினார். #KrishnaRao #AmendmentBill
பாராளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த விரைவில் மசோதா - பாரதீய ஜனதா தலைவர் தகவல்
Published on

ஐதராபாத்:

பாராளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கானா மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் திட்டம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து வருகிறோம்.

இதற்காக அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான மசோதாவை, விரைவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அல்லது சிறப்பு கூட்டம் கூட்டியும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தெலுங்கானாவை பொறுத்தமட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதல்-மந்திரி சந்திர சேகரராவ் கணிக் கிறார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடத்த அவர் விரும்பவில்லை.

நரேந்திர மோடி அரசுக்கு உள்ள நற்பெயரின் தாக்கம் பொதுத்தேர்தலில் ஏற்படும்போது, அது மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என கவலைப்படுகிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் சட்டசபை தேர்தலை நடத்திவிடலாம் என முதல்-மந்திரி சந்திர சேகரராவ் சட்டசபையை கலைத்தாலும்கூட, தொழில்நுட்ப ரீதியில் அது சாத்தியம் கிடையாது. ஏனென்றால் இந்த 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே செய்து முடித்து விட்டது. அத்துடன் இன்னொரு மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தும் நிலையில் தேர்தல் கமிஷன் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.   #KrishnaRao #AmendmentBill

X

Maalai Malar
www.maalaimalar.com