போலீஸ் உளவாளி என கூறி கிராமவாசியை அடித்துக் கொன்று நக்சலைட்கள் அட்டூழியம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி ஒரு அப்பாவி கிராமவாசியை நக்சலைட்கள் அடித்து கொன்றுள்ளனர்.
போலீஸ் உளவாளி என கூறி கிராமவாசியை அடித்துக் கொன்று நக்சலைட்கள் அட்டூழியம்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்தகவுன் மாவட்டத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரன்வாகி கிராமத்தை சேர்ந்த ஜதோராம் ஜஞ்சி என்ற கிராமவாசியை சுமார் 20 நக்சலைட்கள் பிடித்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று ஜதோராம் ஜஞ்சியின் சடலத்தை ராய்மனோராவில் உள்ள ஒரு ஆற்றங்கரையோரத்தில் இருந்து போலீசார் மீட்டனர். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அவரது உடலில் அடுத்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.

கடந்த மாதமும் பிஜப்பூர் மாவட்டத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி மாடேபாபு ராவ் என்ற கிராமவாசியை நக்சலைட்கள் அடித்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com