

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப் (67) பதவி இழந்தார் . அவரது மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீதும் 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் பதவியையும் நவாஸ்செரீப் ராஜினாமா செய்துள்ளார்.
ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கி விட்டால் குடும்பத்தினர் அனைவரும் சிறைக்கு செல்ல நேரிடும். இதனால் நவாஸ்செரீப் குடும்பத்தினரின் அரசியல் ஆட்டம் கண்டுள்ளது.
எனவே, பாகிஸ்தானின் மிகப்பெரிய அதிகார மையமான ராணுவத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி சமரச நடவடிக்கை மேற்கொள்ள நவாஸ்செரீப் முடிவு செய்துள்ளார்.
அதற்கு சவுதி அரேபியா மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஆகியோர் நடுவராக இருந்து சமரசம் செய்து வைக்கின்றனர். அதற்காக நவாஸ்செரீப் நேற்று முன்தினம் விமானம் மூலம் சவுதிஅரேபியா புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே நவாஸ்செரீப் தம்பியும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாயிஸ் செரீப் கடந்த வாரமே சவுதி அரேபியா சென்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
நவாஸ் செரீப்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சயீத் குர்ஷித் ஷா கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக் இ-இன்சாய் கட்சி தலைவர் இம்ரான்கானும் கண்டித்துள்ளார்.