நாட்டறம்பள்ளிக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்ற அரசு பஸ் சிறை பிடிப்பு

நாட்டறம்பள்ளிக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்ற அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தல் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளிக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்ற அரசு பஸ் சிறை பிடிப்பு
Published on

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி தாலுகாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு தொழில், கூலித்தொழில் செய்பவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இப்பகு தியை சேர்ந்த 40 சதவீதம் இளைஞர்கள் வெளிநாட்டில் பணி புரிந்து வருகின்றனர்.

வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வரும் பஸ்களும் நாட்டறம்பள்ளி வழியாக சென்று வந்தாலும், பஸ் நிலையத்துக்கு வராமல் பைபாஸ் வழியாக சென்று வருகிறது.

நாட்டறம்பள்ளி மேம்பாலத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டு பஸ் நிலையத்துக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டறம் பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்ல ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் வயதானவர்களும் குழந்தைகளும் தடுமாறி விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து மண்டல அலுவலகம், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் என பலரிடம் முறையிட்டும் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்து, கடந்த திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் நாட்டறம் பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் வேலூரில் இருந்து பெங்க ளூருக்கு இயக்கப்படும் பஸ்களும், பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக வேலூர் சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து பஸ்களும், நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். என கூறப்பட்டிருந்தன.

மனுவை பரிசிலனை செய்த கலெக்டர் ராமன் நாட்டறம்பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என போக்கு வரத்து துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை விரிவாக்கம் செய்ய நாட்டறம்பள்ளிக்கு நேற்று காலை சென்றனர்.

இதையறிந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்துக்கு வந்து செல்ல உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில், பெங்குளூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னை பெங்களூர் நாற்கர சாலை வழியாக செல்லும் ஒரு சில பஸ்களை நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் சென்றுவர ஒரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com