

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது நீங்கள்தான் (மோடி). நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவைத்தான் எதிர்த்துப் போராடினோம். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அல்ல.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் முதலமைச்சராக விரும்புகிறாரா?. பெண்களின் உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்களை காங்கிரஸ் கட்சி கொண்டிருந்தது என்பதை நினைவூட்டுகிறேன்.
இவ்வாறு கார்கே பேசினார்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கருக்கொலை" செய்ததாக பிரதமர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.