சனாதனம் குறித்த பேச்சு: கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்ததாக உதயநிதிக்கு நீதிமன்றம் கண்டிப்பு

நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர்.விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்.
சனாதனம் குறித்த பேச்சு: கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்ததாக உதயநிதிக்கு  நீதிமன்றம் கண்டிப்பு
Published on

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசினார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து அமைப்பை சேர்ந்த பல்வேறு தரப்பினர் பல மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபகள், "நீங்கள்  அரசியலமைப்பின் 19(1)(ஏ)- பிரிவின் கீழ் உங்களது கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.  அரசியலமைப்பு 25-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.

தற்போது உங்களுக்கு உள்ள உரிமையின்படி மேல்முறையீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் பேசியதின் விளைவுகள் உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர். விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com