இந்தியாவில் Freshers-களின் சம்பளம் இவ்வளவா? வெளியான ஆய்வு முடிவு

இந்தியாவில் கல்வி முடித்ததும் பணியில் சேர ஆயத்தமாவோருக்கு பணி கிடைப்பது சவாலான காரியமாகவே உள்ளது.நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் குறிப்பாக மெட்ரோ நகரங்கள் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன.
இந்தியாவில் Freshers-களின் சம்பளம் இவ்வளவா? வெளியான ஆய்வு முடிவு
Published on

உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோர் கல்வியை முடித்து சுயதொழில், வேலைவாய்ப்பு என வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். கல்வி முடிக்கும் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

பொதுவாக இந்தியாவில் ஃபிரெஷர் (Fresher) எனப்படும் கல்வி முடித்ததும் பணியில் சேர ஆயத்தமாவோருக்கு பணி கிடைப்பது சவாலான காரியமாகவே உள்ளது. இருந்தும் வேலை கிடைக்கிறது எனில், அது பிபிஓ அல்லது யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையிலான பணியாகவே உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் ஃபிரெஷர்களின் வருவாய் குறித்த ஆய்வில் அதிர்ச்சிகர முடிவுகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஃபவுன்ட்-இட் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கடந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், ஃபிரெஷர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.3 முதல் 6 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 21-30 வயதிற்குட்பட்ட பணியாளர்களின் சம்பளம் 25 முதல் 33 சதவீதம் வரை என குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஃபிரெஷர்களுக்கான சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம் இரண்டும் நிலையாக அதிகரித்துள்ளது. அடிப்படை சம்பள உயர்வு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக, வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் போன்ற துறைகள்தான் இருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் குறிப்பாக மெட்ரோ நகரங்கள் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் அடிப்படை வாடகை மாதத்திற்கு ரூ.15,000 முதல் 20,000 வரை உயர்ந்துள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் வாடகை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. செலுத்த வேண்டிய பல மாதச் செலவுகளில் வாடகை ஒன்று மட்டுமே. தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் இன்னும் பல செலவுகளும் கவனிக்கப்பட வேண்டும்.

உணவு மற்றும் எரிபொருளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு 2019 அக்டோபரில் 147.2ல் இருந்து மே 2024ல் 187.6 ஆக உயர்ந்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வீட்டுச் செலவுகள் குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், 2024-ல் செலவுகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com