

மத்திய பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சுரங்கத் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிற்பகல் 3 மணியளவில் மாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிலியா காட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இருவர் உயிரிழந்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் தொழிற்சாலை பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அதற்குள் அங்கு வந்து அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Mob torches 5 buses, 2 trucks of a power plant in #Singrauli district of #madhyapradesh after two persons die in accident by truck of the power plant pic.twitter.com/iMzIeJdFER