நாட்டில் இருக்கும் பதற்றமே போதும்.. லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் கருத்து

சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது
நாட்டில் இருக்கும் பதற்றமே போதும்..  லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் கருத்து
Published on

திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் , நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு நடிகரும் அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த விவகாரம் நீங்கள் துணை முதல்வராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள்.

அதைவிட்டுவிட்டு ஏன் இந்த பிரச்சனையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது [அதற்கு மத்தியில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி] #justasking என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜன சேனாவும், மத்தியில் ஆளும் பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com