முகலாய மன்னர் அக்பரை பெருமையாக குறிப்பிடும் பாடப் புத்தகங்கள் எரிக்கப்படும் - ராஜஸ்தான் கல்வி மந்திரி

'அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்''1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் மஹாராணா பிரதாப்.'
முகலாய மன்னர் அக்பரை பெருமையாக குறிப்பிடும் பாடப் புத்தகங்கள் எரிக்கப்படும் - ராஜஸ்தான் கல்வி மந்திரி
Published on

முகலாய மன்னர் அக்பரைக் குறித்து பெருமையாக விவரிக்கும் பாடபுத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தடாலடியாக தெரிவித்துள்ளார். உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அக்பரை அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்.

மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பர் தனது சொந்த நலனுக்காக மக்களை கொலை செய்தவர். அப்படிப்பட்ட அக்பரை சிறந்தவர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்யத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இருக்க முடியாது. [மாநிலத்தின்] எல்லா வகுப்புகளின் பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம், இதுவரை எந்த புத்தகத்திலும் அப்படி [அக்பரை சிறந்தவர்] குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்கள் தீயிலிட்டு எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மஹாராணா பிரதாப் சிங் மேவார் ராஜ்யத்தின் போற்றப்படும் அரசர்களுள் ஒருவர் ஆவார். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் அவர். இதற்கிடையே, இந்து முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி புனித பயண வரி நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்பரை குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியுள்ள கருத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com