என் மலர்
இந்தியா

பயங்கரவாதி மசூத் அசார் பதுங்கியுள்ள இடம் கண்டுபிடிப்பு.. இந்திய எல்லை அருகே இருப்பதாக உளவுத்துறை தகவல்
- அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
- மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள்.
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர்.
மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறும் போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இந்த பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி சிதைத்தது. இதில் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் தலைமை முகாம் அடங்கும். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள். மசூத் அசார் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய எல்லை அருகே மசூத் அசார் பதுங்கி இருப்பதால் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.






