பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானா வாலிபர் உயிரிழப்பு

கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர்.காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.
பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானா வாலிபர் உயிரிழப்பு
Published on

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஷாபாஸ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஷாபாஸ்கான் சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக காரில் புறப்பட்டார். சவுதி அரேபியாவில் பரந்து விரிந்த மோசமான ரூபா அல் காலி பாலைவனத்திற்கு சென்றனர்.

பாலைவனத்தின் மையப்பகுதிக்கு சென்ற போது அவர்களது காரில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஎஸ் கருவி செயல் இழந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களில் சிக்னல் கிடைக்காமல் எந்த வழியாக செல்வது என தெரியாமல் சிக்கித் தவித்தனர். கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவு மற்றும் குடிநீர் காலியானது. காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.

நீர் இழப்பு மற்றும் சோர்வு காரணமாக பாலைவனத்தில் மயங்கி விழுந்த இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். வெளியே சென்ற ஊழியர்கள் 5 நாட்களாக மீண்டும் பணிக்கு வராததால் காணாமல் போனதாக நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாபாஸ்கான் மற்றும் அவருடன் சென்ற ஊழியரை போலீசார் பிணமாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com