விவசாயிகள் உயிரிழந்ததாக பதிவுகள் இல்லை என்பதா? -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

போராட்டத்தின்போது உயிரிழந்த 403 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் தவறு செய்துவிட்டதாக கூறி பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதாகவும், அந்த தவறுதான்  700 விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயிகள் இறந்ததற்கு  பதிவே இல்லை என்று கூறிய மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.  மத்திய அரசின் இந்த பதில், உணர்ச்சியற்றது மற்றும் ஆணவமானது என்றும் குற்றம் சாட்டினார்.

‘போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என்கிறது மத்திய அரசு. போராட்டங்களின்போது பஞ்சாப்பிற்கு வெளியே மட்டும் உயிரிழந்த 100 விவசாயிகளின் விபரம் காங்கிரசிடம் உள்ளன. பொதுப்பதிவில் மேலும் 200 பேர் உயிரிழந்த விபரம் இருக்கிறது என்று’ ராகுல் குறிப்பிட்டார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு பஞ்சாப் அரசு காரணமல்ல என்று கூறிய ராகுல், போராட்டத்தின்போது உயிரிழந்த 403 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது என்றார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை மோடி அரசு ஏற்றுக் கொள்ளும் என தாம் கருதவில்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com