search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்- பிரதமர், முதல்வர் இரங்கல்
    X

    பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்- பிரதமர், முதல்வர் இரங்கல்

    • பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர்.

    அதன்பின்னர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ராஜு ஸ்ரீவஸ்தவா நம் வாழ்வை சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை உணர்ச்சிகளால் பிரகாசமாக்கினார். அவர் விரைவாக நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "ராஜு ஸ்ரீவஸ்தவா இப்போது நம்முடன் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய உ.பி. மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×