பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 நாளில் ரூ.100 கோடி நன்கொடை

கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் விவரம் சரியான நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் உமேஷ் குஷ்வாகா
ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் உமேஷ் குஷ்வாகா
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

ஆளும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையின் போது மக்கள் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 நாட்களில் ரூ.100 கோடி நன்கொடை குவிந்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் உமேஷ் குஷ்வாகா கூறும்போது, ‘கட்சிக்கு கடந்த 15 நாட்களில் ரூ.100 கோடி நன்கொடையாக வந்துள்ளது. இந்த பெரிய தொகையை கட்சியின் தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அளித்துள்ளனர்.

இது முதல்-அமைச்சர் நிதிஷ் குமாரின் புகழை காட்டுகிறது. மார்ச் மாதம் இறுதிக்குள் ரூ.300 கோடி நன் கொடையாக பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நன்கொடை சேமிப்பு செயல்முறை வெளிப்படையானது. அது பொதுகளத்தில் வைக்கப்படும்.

கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் விவரம் சரியான நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். இது நன்கொடை விவரங்களை மக்கள் அணுகுவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.

எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.பிரேந்திரா கூறும் போது, ‘ஐக்கிய ஜனதா தளம் நன்கொடையாக வசூலித்த பெரும் தொகையை கருப்பு பணம் என்று விமர்சித்தார். கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com