நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்- பிரதமர் மோடி பேச்சு

இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.
நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்- பிரதமர் மோடி பேச்சு
Published on

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு தேசிய சட்ட தினமாக கடை பிடிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன நிகழ்ச்சிகள் நடந்தது. அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும்.

இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.

மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும்.

இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com