search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் 9-ந்தேதி முதல் போராட்டம்- மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை
    X

    பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் 9-ந்தேதி முதல் போராட்டம்- மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

    • மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
    • மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் அறிவித்தனர்.

    பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் ஜூன் 9-ந்தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    அரியானாவில் குருஷேத்திரத்தில் விவசாய சங்கங்களின் மகாபஞ்சாயத்து நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது:-

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தை தீர்க்க அரசாங்கத்திற்கு ஜூன் 9-ந்தேதி வரை அவகாசம் அளிக்கிறோம்.

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் அல்லது ஜூன் 9-ந்தேதி முதல் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் மல்யுத்த வீரர்களுடன் 9-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தை தொடங்குவோம். நாடு முழுவதும் மகா பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும்.

    மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×