search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவின் அத்துமீறல் தொடர்வது கவலைக்குரியது- காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
    X

    சீனாவின் அத்துமீறல் தொடர்வது கவலைக்குரியது- காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு

    • சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும்.
    • இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்பு சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்வது கவலைக்குரிய விஷயமாகும். சீனாவின் ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இது கண்டனத்திற்குரியது. தீவிர அக்கறையுள்ள விஷயங்களில் மவுனம் காப்பது சரியல்ல.

    சீனா நம்மை தொடர்ந்து தாக்க துணிவது ஏன்? இந்த தாக்குதலை தடுக்க என்ன தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் என்ன செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சீன ஊடுருவுவதை தடுக்க அரசின் கொள்கை என்ன? சீனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி அதிகமாக செய்கிறோம். சீனாவின் ராணுவ விரோத போக்குக்கு பொருளாதார பதில் இல்லாதது ஏன்?

    இந்த மோதலில் இருதரப்பில் இருந்தும் ஒருசில வீரர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் தேவை. இதை நாடே எதிர்பார்க்கிறது. பொது மக்களிடம் கொள்கைகளை, செயல்களை விளக்குவதும் அரசின் கடமையாகும்.

    சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும். மேலும் அரசின் நோக்கங்களை மோசமாக பிரதிபலிக்கிறது.

    வெறுப்பை பரப்புவதன் மூலமும், சமூகத்தில் சில பிரிவினை குறிவைப்பதன் மூலமும் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றாக நிற்பதை அரசு கடினமாக்குகிறது.

    இத்தகைய பிளவுகள் நம்மை பலவீனப்படுத்தி மேலும் பாதிப்படைய செய்துள்ளன. இதுபோன்ற சமயங்களில் மக்களை ஒன்றிணைப்பது அரசின் முயற்சியாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். பிளவுபடுத்தக்கூடாது.

    எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அரசு தெரிவித்தபோதிலும் பொருளாதார நிலை தொடர்ந்து துயரத்தில் இருக்கிறது.

    டெல்லி, குஜராத் தேர்தல் முடிவுகள் துரதிருஷ்டவசமானது. இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு சோனியா பேசினார்.

    Next Story
    ×