6 மாதம் கழித்து விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு - அப்போ குற்றச்சாட்டுகள்?

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்
Published on
Summary

லடாக்கில் நடந்த போராட்டங்களில் 4 பேர் உயிரிழந்ததற்கும் 90 பேர் காயமடைந்ததற்கும் இவரே காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் லடாக் மாநில அதஸ்துக்காக தொடர்ந்து போராடி வருபவருமான விஞ்ஞானி சோனம் வான்சுக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

லடாக்கில் அரசுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

லடாக்கில் நடந்த போராட்டங்களில் 4 பேர் உயிரிழந்ததற்கும் 90 பேர் காயமடைந்ததற்கும் இவரே காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

பாகிஸ்தானுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் லடாக் காவல்துறை அவர் மீது குற்றம்சாட்டியது.

வாங்சுக்கின் கைது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சோனம் வாங்சுக் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லடாக்கில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும் வளர்ப்பதற்கும் மத்திய அரசு விரும்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 6 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு சோனம் வாங்சுக் விடுதலை செய்யப்பட உள்ளார்.

யார் இந்த வாங்சுக்?

2009-ல் வெளியான '3 இடியட்ஸ்' (தமிழில் 'நண்பன்') திரைப்படத்தில் அமீர் கான் (தமிழில் விஜய்) நடித்த கொசக்சி பசபுகழ் என்ற கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும்.

படத்தில் மாணவர்களுக்கு செயல்முறை ரீதியாக கற்பிக்கும் பள்ளி  லடாக்கில் சோனம் வாங்சுக்-ஆல் நடத்தப்படுகிறது. லடாக்கில் சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட வாங்சுக், லடாக்கின் உரிமைகளுக்காக போராடும் தார்மீகக் குரலாக உருவெடுத்தார்.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடியின மக்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 6-வது அட்டவணை அந்தஸ்து, லடாக்கிற்கு பாராளுமன்ற தொகுதிகள் ஆகியவை வாங்சுக் மற்றும் லடாக் மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இவற்றை வழங்க திட்டவட்டமாக மறுத்து வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com