ரெட் சல்யூட் காம்ரேட்.. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக சீதாரம் யெச்சூரி காலமாணார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Sitaram Yechury
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது."

"தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதால், நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்பான வாழ்க்கையை வடிவமைத்தது."

"அவருடன் நான் கொண்டிருந்த ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரெட் சல்யூட், காம்ரேட்!," என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com