

உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.