search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட்
    X

    வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட்

    • 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் அதில் இருந்து பிரிந்து செயற்கைகோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதைக்கு சென்றது.

    தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை (ஐ.ஆர்.என்.எஸ். எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

    அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆர் என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1 எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த ராக்கெட் மொத்தம் 51.7 மீட்டர் என்றளவுக்கு பிரமாண்டமான உயரம் கொண்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

    இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்ட இலக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் அந்த ராக்கெட் கடந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    இந்த ராக்கெட் மூலம் 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 20 நிமிடங்களில் அதில் இருந்து பிரிந்து செயற்கைகோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதைக்கு சென்றது. இந்த செயற்கைகோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

    இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும்.

    மேலும் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.

    Next Story
    ×