search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பது நல்ல விஷயம்: ராகுல் காந்தி கருத்து
    X

    ஒரு சிறுமி தான் வரைந்த ராகுல்காந்தியின் ஓவியத்தை அவரிடம் வழங்கிய போது எடுத்தபடம்.

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பது நல்ல விஷயம்: ராகுல் காந்தி கருத்து

    • நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
    • 19-ந்தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

    எர்ணாகுளம் :

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடித்து வரும் நிலையில், கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    அதன்படி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக்கோரி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி பிரிவுகள் சார்பில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன. எனினும் அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் கேரளாவில் இந்திய ஒற்றுமைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது, நான் செய்து கொண்டிருக்கும் பணியை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்த காங்கிரஸ் தலைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது. இது மோசான விஷயம் என நான் நினைக்கவில்லை. இது நல்ல விஷயம்தான்.

    தனக்கான தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்யும் ஒரே கட்சி, காங்கிரஸ்தான். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது என்னை உற்சாகப்படுத்துகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும்? என எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இடதுசாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளிடம் கேட்கமாட்டீர்கள்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு நான் கூறுவது, நீங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. இது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் ஒரு நிலைப்பாடு.

    காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வெறும் ஒரு அமைப்பு பதவி அல்ல, மாறாக இது ஒரு சித்தாந்த பதவி. இது ஒரு நம்பிக்கை அமைப்பு.

    காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும் அவர் ஒரு நம்பிக்கை அமைப்பையும், இந்தியாவின் பார்வையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    காங்கிரசில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முடிவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 'உதய்ப்பூர் சிந்தனையாளர் முகாமில் எடுக்கப்பட்ட அந்த உறுதிப்பாடு (ஒருவருக்கு ஒரு பதவி) கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது.

    2000-ம் ஆண்டு, தலைவர் பதவிக்கு சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அதில் சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.

    அதற்கு முன்பு, 1997-ம் ஆண்டும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது, சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை தோற்கடித்து சீதாராம் கேசரி தலைவர் ஆனார்.

    ராகுல்காந்தி தலைவராக இருந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளை தவிர, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சோனியாகாந்தி தலைவராக இருக்கிறார். காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருப்பவர் அவரே ஆவார்.

    Next Story
    ×