உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்த ஜனாதிபதி.. விமர்சித்த அரச குடும்ப உறுப்பினர்கள்

உதய்பூர் அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார். ஜனாதிபதியின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளனர்.
President Droupadi Murmu
Published on

அக்டோபர் 3 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.

அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் மற்றும் அவரது மனைவி நிவ்ரிதி குமாரி, ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று அரண்மனையின் வரலாறு மற்றும் மரபுகளை விளக்கினர். ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே, துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் இருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்சமந்த் தொகுதி எம்பி மஹிமா குமாரி மேவார் மற்றும் அவரது கணவரும் நாத்வாரா எம்எல்ஏ விஸ்வராஜ் சிங் மேவார் ஆகிய 2 பாஜக பிரதிநிதிகளும் திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை விமர்சித்துள்ளனர்.

அரண்மனையின் சொத்து தகராறு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அரண்மனைக்கு ஜனாதிபதி வந்தது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய மஹிமா குமாரி மேவார், "அரண்மனையின் சொத்து தகராறு தொடர்பாக ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து அவரது வருகையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனாலும் அவர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உதய்பூர் மாவட்ட ஆட்சியரைதொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வருகை தனிப்பட்ட முறையிலானது என்றும் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடவில்லை என்றும் உதய்பூர் ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் விளக்கம் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com