ஐந்தே நிமிடத்தில்.. கொடுத்த வாக்கை மீறிய மத்திய அமைச்சர்கள் - சோனம் வாங்சுக் ஆதங்கம்

அமைச்சர்கள் தனது நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும், இதனால் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் தான் இழந்துவிட்டதாக சோனம் வாங்சுக் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்
Published on

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஜந்தர் மாந்தர் போராட்டத்தின் வெற்றி முக்கிய காரணம் கல்வியாளர் சோனம் வாங்சுக்.

போராட்டத்திற்கு ஆதரவாக 26 நாட்கள் அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணிக்கு 2 நாட்கள் முன்னர் ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக அவர் டெல்லி போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடி அவர் தன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் அழுத்தத்தின் பேரில் ஜூலை 24 அன்று மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஜூலை 20 பேரணி சென்று கைதான மாணவர்களை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்பட்டதால் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என சிஜேபி உறுதியாக இருந்தது. போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்ததை தொடர்ந்து பிரதான் ராஜினாமா செய்தார்.

சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு

அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சோனம் வாங்சுக், தன்னை சந்தித்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்கை மீறியதாக குற்றம்சாட்டடியுள்ளார்.

நேற்று செய்தி நிறுவன நேர்காணலில் அவர் கூறியதாவது, "சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளை இணைத்து கூட்டு அறிவிப்பாக வெளியிடும் வரை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என அமைச்சர்களிடமும், உடன் இருந்த உளவுத்துறை அதிகாரிகளிடமும் தெளிவாகக் கூறியிருந்தேன். அவர்களும் அதற்கு சம்மதித்து வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், ஐந்து நிமிடங்களுக்குள் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஓடிவந்து, இந்த புகைப்படங்கள் ஏற்கனவே செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதாகக் கூறினார்" என அவர் தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.

அமைச்சர்கள் தனது நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும், இதனால் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் தான் இழந்துவிட்டதாகவும் சோனம் வாங்சுக் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ரகசிய ஒப்பந்தம்?

அரசுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், "என்னை கல்வி அமைச்சராக்குங்கள் என்று கூடக் கேட்டிருக்கலாம். எனக்கு பல வாய்ப்புகள் இருந்தன.

எனக்கு ஒப்பந்தம் போடும் எண்ணம் இருந்திருந்தால் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை." என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com