search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மஹுவா மொய்த்ராவை மம்தா கைவிட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை: அமித் மால்வியா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மஹுவா மொய்த்ராவை மம்தா கைவிட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை: அமித் மால்வியா

    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பணம் பெற்றுக்கொண்டு அதானிக்கு எதிராக கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு
    • பாராளுமன்ற நெறிமுறைக்குழு இதுகுறித்து விசாரணை நடத்த இருக்கிறது

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இதுதொடர்பாக குற்றம்சாட்டிய இருவரிடம் பாராளுமன்ற நெறிமுறைக்குழு வருகிற 26-ந்தேதி விசாரணை நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விசயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மஹுவாவிடம் இருந்து ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவின் அமித் மால்வியா கிண்டல் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மஹுவா மொய்த்ராவை மம்தா பானர்ஜி கைவிட்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவர் அபிஷேக் பானர்ஜியைத் (குற்றத்தில் குறைந்தவர் அல்ல) தவிர மற்ற யாரையும் பாதுகாத்துக் கொள்ளமாட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜெயிலில் உள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி மவுனம் காத்து வருகிறார்.

    இவ்வாறு அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே, தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுமா மொய்த்ரா, அவருடைய பாராளுமன்ற லாக்கின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வழங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுந்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், ஒரு வார்த்தைக் கூட வெளியிடப்படாது. இது தொடர்பான நபர் விளக்கம் அளிப்பார் அல்லது இது குறித்து பதில் அளிப்பார். திரிணாமுல் காங்கிரஸ் பதில் அளிக்காது என, அக்கட்சியின் பொது செயலாளர் குனால் கோஷ் தெரிவித்திருந்தார்.

    தன்மீதான புகார்கள் அனைத்தையும் மறுத்துள்ள மஹுவா மொய்த்ரா, ''போலி பட்டம் பெற்றவர்கள் உட்பட பல உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் முடித்து விட்டு எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்கிறேன்'' என்றார்.

    தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனி, மஹுமா மொய்த்ராவின் பாராளுமன்ற லாக்கின் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தியாக தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×