

கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட இளநிலை மருத்துப்படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நீட் மறு தேர்வு வினாத்தாளும் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் பக்கத்தில், நீட் 2026 மறுதேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டது, விற்பனை செய்யப்படுகிறது என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை.
மோசடி கும்பல்களால் திட்டமிட்டு இவை பரப்பப்படுகின்றன. மாணவர்களிடன் பதற்றத்தை தூண்டி வினாத்தாள்களை விற்பனை செய்வதாக கூறி பணம் பறிப்பதே அவர்களின் நோக்கம்.
எனவே மாணவர்கள், பெற்றோர்கள் இதுபோன்ற தகவல்களை நம்பவோ, பணம் செலுத்தவோ அல்லது பிறருக்கு பகிரவோ கூடாது. மோசடி கும்பல்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தேர்வு நடைமுறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.