'அலோபதி மருந்துகளால் கோடிக் கணக்கானவர்கள் கொலை.. இஸ்லாமின் பெயரால்'.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்
'அலோபதி மருந்துகளால் கோடிக் கணக்கானவர்கள் கொலை.. இஸ்லாமின் பெயரால்'.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை
Published on

அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால்  கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.

நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com