என் மலர்
இந்தியா

கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம் - ஆண் பயணிகளுக்கு சேலை, பூ கொடுத்து கன்னட அமைப்புகள் போராட்டம்
- டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் 90 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் பெலகாவியில் இருந்து மராட்டிய மாநிலம் சுலேபாவிக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக மகாதேவப்பா என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவர் மராட்டியத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் டிக்கெட் எடுக்கும்படி கன்னடத்தில் கூறினார். அதற்கு அவர்கள் மராத்தி மொழியில் பேசினர். இதை கேட்டு கோபம் அடைந்த மகாதேவப்பா, கன்னடத்தில் பேசும்படி மாணவ-மாணவிகளை திட்டினார்.
இதை பஸ்சில் பயணித்த மராட்டிய இளைஞர்கள் பார்த்து மகாதேவப்பாவிடம் தகராறில் ஈடுபட்டனர். பலேகுந்திரி என்ற இடத்தில் பஸ் நின்றதும், தகராறு முற்றியது. அப்போது பஸ்சுக்குள் நுழைந்த சிலர் மகாதேவப்பா மற்றும் டிரைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மாரிகாலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் மகாதேவப்பா, மாரிகாலா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பலேகுந்திரி கிராமத்தை சேர்ந்த மாருதி துருமுரி, ராகுல் ராஜூ, பாலு கோஜகேகர் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவனை தவிர்த்து மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மராட்டியத்தை சேர்ந்த மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் கண்டக்டர் மகாதேவப்பா மீது போலீசார் 'போக்சோ'வில் வழக்குப்பதிவு செய்தனர். மகாதேவப்பா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், மோசமான சைகைகளை செய்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் மாரிகாலா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டிரைவர், கண்டக்டர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கூறினர். மேலும் கர்நாடக-மராட்டிய எல்லையிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் மராட்டிய அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் சாலையில் டயர்கள், உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் சித்ரதுர்காவில் உள்ள குய்லால் சுங்கச்சாவடியில் குய்லாலா சுங்கச்சாவடி அருகே நவ நிர்மாண் சேனா அமைப்பினர் மகாராஷ்டிராவை சேர்ந்த பஸ் டிரைவர் ஹரிஜாதவினர் முகத்தில் மைபூசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் பஸ் முழுவதும் கருப்பு வண்ணப்பூச்சை தூவினர். ஜெய்கர்நாடகா, ஜெய் கன்னடம், பெல்காம் எங்களுடையது என பஸ்சில் எழுதி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சேனா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து பெல்காமுக்கு புறப்பட்ட பஸ்களை கருணாட விஜய சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தி சித்ரதுர்கா பஸ் நிலையத்தில் போராட்டத்தல் ஈடுபட்டனர். இந்நிகழ்வின்போது ஆண் பயணிகளுக்கு சேலைகள் உடுத்தி, பூக்கள் வழங்கப்பட்டன. பெலகாவியில் உள்ள மராத்தியர்கள் உடனடியாக கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பெலகாவியை விட்டு மகாராஷ்டிரா செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர்.
அதேநேரம் மராட்டியத்துக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் மீது அங்கிருக்கும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெலகாவி மாவட்டம் மராட்டியத்துக்கு சொந்தமானது. இம்மாவட்டத்தை கர்நாடகாவில் இருந்து பிரித்து மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்க்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மராட்டிய மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதை தடுக்காதீர்கள் என கூறி போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே பயணிகளின் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு இருமாநில பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருமாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையான நிப்பாணி தாலுவாவில் உள்ள கோகனொல்லி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.






