காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி இன்று 2 இடங்களில் பிரசாரம்

காஷ்மீர் தேர்தலில் வழக்கம்போல அதிகளவு சுயேட்சைகள் களத்தில் உள்ளன.ஸ்ரீநகர் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி கத்ரா நகருக்கு செல்கிறார்.
காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி இன்று 2 இடங்களில் பிரசாரம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

நேற்று காலை முதலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிறகு விறுவிறுப்பு அடைந்தது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மொத்தம் 61.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வாக்குப்பதிவு அதிகரித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காஷ்மீரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது.

அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அன்று 26 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

காஷ்மீர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி உமர்அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் போட்டியிடுகிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

காஷ்மீர் தேர்தலில் வழக்கம்போல அதிகளவு சுயேட்சைகள் களத்தில் உள்ளன. இதனால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிரமாகி உள்ளது.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த கூட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ஸ்ரீநகரில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி ஸ்ரீநகரில் இன்று முதன் முறையாக பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை அவர் வாக்காளர்களிடம் விளக்கி கூறி ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

ஸ்ரீநகர் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி கத்ரா நகருக்கு செல்கிறார். அங்கு பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதன்பிறகு அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்கிறார். அதன்பிறகு டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com