search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-4 திட்டம்: இஸ்ரோ தகவல்
    X

    ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-4 திட்டம்: இஸ்ரோ தகவல்

    • சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது.
    • சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும்.

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அடுத்து நிலவை நோக்கிய சந்திரயான்-4 திட்டத்தை ஜப்பான் உடன் இணைந்து இந்தியா செயல்படுத்த உள்ளது. நிலவு துருவ ஆய்வு பணி ('லூபெக்ஸ்') என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் 'ரோபோட்' எந்திரங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த 'லூபெக்ஸ்' திட்டமே சந்திரயான்-4 எனும் பெயரில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்தியாவும், ஜப்பானும் இணைந்து எந்திர ரோபோடிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேண்டரை நிலவிற்கு அனுப்பும் திட்டம் தான் 'லூபெக்ஸ்'. இந்த திட்டத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான (ஜாக்ஸா) இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது. இந்த நிலையில், சந்திரயான்-2 திட்டத்திற்கு பிறகு சந்திரயான்-3 திட்டம் 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் தரையிறங்காத காரணத்தால், சந்திரயான்-2 திட்டத்தின் நீட்சியாக சந்திரயான்-3 இருந்தது.

    தற்போது சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது. இதையடுத்து இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவின் ஆய்வு 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சந்திரயான் திட்டத்தின் நீட்சியாக 'லூபெக்ஸ்' இருக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கான முன்னோட்டமாக இந்திய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நேரில் சந்தித்து 'லூபெக்ஸ்' திட்டம் குறித்தும், சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா விண்கலம் எடுக்கும் தரவுகளை பகிர்வது தொடர்பாக விவாதித்துள்ளனர். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 'லூபெக்ஸ்' திட்டத்தில் உள்ள லேண்டர் இந்தியா சார்பிலும், ரோவர் ஜப்பான் சார்பிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சந்திரயான்-3 திட்டத்தில் அறிவியல் ஆய்வுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தான அனைத்து தகவல்களும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்திற்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக 'லூபெக்ஸ்' திட்டம் இருக்கும். இந்த திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவருக்கு ஆயுட்காலம் 6 மாதங்களாகும். இதில் பொருத்தப்பட உள்ள லேண்டர் மற்றும் ரோவரின் எடை 350 கிலோவாகும். நிலவின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய எந்திர கைகள் 'லூபெக்ஸ்' திட்டத்தில் ரோவரில் இருக்கும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் படிமங்களையும், நீர் மூலக்கூறுகளையும் சேகரிக்க முடியும்.

    சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் சந்திரயான் 4-ல் பணியாற்ற மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    Next Story
    ×