என் மலர்
இந்தியா

குஜராத் மேற்கு வங்கத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. வட மாநிலங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
- அடுத்த சில நாட்களுக்கு பல வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
- கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மேற்கு வங்கத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. வட மாநிலங்களுக்கு வானிலை மையம் அலர்ட்கடந்த 24 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில நாட்களுக்கு பல வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தின் ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர். அங்கு கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கார்பட்டா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. வெள்ளம் பாய்ந்தோடியதில், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.






