

திருவனந்தபுரம்:
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.