நாகாலாந்தில் கனமழையால் நிலச்சரிவு.. 8 பேர் உயிரிழப்பு

காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்து நிலச்சரிவு
நாகாலாந்து நிலச்சரிவு
Published on

நாகாலாந்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாகாலாந்து மாநிலத்தின் Mon மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு

இந்த நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 4 பேரின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உள்ளூர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவால் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து முழுமையாக சேதமடைந்தன.

நிலச்சரிவைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 74,000 மருத்துவ நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

மான் மாவட்டம் மட்டுமன்றி, மொகோக்ச்சுங் மாவட்டத்தின் துலி உள்ளிட்ட நாகாலாந்தின் பல பகுதிகளும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உள்கட்டமைப்புகள் மற்றும் பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை

தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், விழிப்புடன் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com