

பிலிபித்:
நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்றொருபுறம் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பாஜக கட்சி சார்பிலும், பிற அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை விமர்சிக்கும் விதமாக பாஜக எம்பி வருண் காந்தி கூறியிருப்பது:-
உத்தரப்பிரதேசத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பகலில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கைகள் சாதாரண மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பை கணக்கில் கொண்டு ஒமைக்ரானை தடுப்பது முக்கியமா அல்லது தேர்தல் முக்கியமா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு வருண் காந்தி விமர்சித்துள்ளார்.
இதையடுத்து வருண் காந்தி பாஜகவில் இருந்துக்கொண்டே தலைமையை விமர்சிப்பதாக அக்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.