அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனு வாபஸ்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனு வாபஸ்
Published on

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். 

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

அமலாக்கத்துறை சார்ந்த வழக்குகளை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திவேதி அமர்வுதான் இந்த வழக்கையும் விசாரிக்க இருந்த நிலையில், கெஜ்ரிவால் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

இதே அமர்வு, கடந்த பிப்ரவரியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இம்மாதம் பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுத்தது. மேலும், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com