என் மலர்
இந்தியா

குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள் வாரிசுகளுக்கு அரசு வேலையில் வழங்கப்பட்ட வயது தளர்வு ரத்து - மத்திய அரசு
- 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.
- 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன.
2002 குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னர் வழங்கப்பட்ட வயது தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த முடிவு குஜராத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 தேதியிட்ட மத்திய அரசின் துணைச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வயது தளர்வை ரத்து செய்கிறது.
2007 முதல் இந்த விதியின்மூலம் துணை ராணுவப் படைகள், இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள், மாநில காவல்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதுச் தளர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டங்கள் குவிந்து வருகின்றன.
குஜராத் கலவரம்
2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
மோடி அரசும், காவல்துறையுமே இதற்கு முக்கிய பொறுப்பு என அவ்வமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்க்கிடேயே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரெயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது.
இந்த கலவரத்தை குஜராத் முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






