திருப்பதி உண்டியல் பணத்தில் 1 சதவீதம் மாநகராட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க. எதிர்ப்பு: இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு

ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?
திருப்பதி உண்டியல் பணத்தில் 1 சதவீதம் மாநகராட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க. எதிர்ப்பு: இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு
Published on

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.

தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.

இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.

அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?

ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.

ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.

மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.

உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.

பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com