என் மலர்
இந்தியா

மக்களவைக்கு வராத எம்.பி.க்கள்: நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் பா.ஜ.க.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது. இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 20 பா.ஜ.க. எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி திட்டமிட்டுள்ளது.






