பா.ஜ.க. பிரமுகர் பண்ணையில் சேவல் பந்தயம்: தங்க நாணயங்கள்- சண்டை கோழிகள் பறிமுதல்

பண்ணை வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்து சேவல் பந்தயம் நடத்தப்பட்டது. தப்பி ஓடிய 61 பேரை போலீசார் பிடித்து விசாரணை.
பா.ஜ.க. பிரமுகர் பண்ணையில் சேவல் பந்தயம்: தங்க நாணயங்கள்- சண்டை கோழிகள் பறிமுதல்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், புறநகர் பகுதியான தோல் கட்டாவில் பா.ஜ.க. எம்.எல்.சி ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.

இந்த பண்ணை வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்து சேவல் பந்தயம் நடத்தப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சேவல் பந்தயம் நடைபெறும் பண்ணைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

போலீசார் வருவதை கண்டதும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். பண்ணை வீட்டில் இரவு நேரத்திலும் சேவல் சண்டையை காண கேலரிகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள், எல்.இ.டி. டி.விகள் பொருத்தப்பட்டு இருந்தது.

பந்தயத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அசைவ உணவு மற்றும் மதுபான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனை கண்டு போலீசார் திகைத்துப் போயினர்.

தப்பி ஓடியவர்களை தவிர்த்து மீதமுள்ள 61 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அனைவரும் தொழிலதிபர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் ரொக்க பணம், ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள், 50 கார்கள், 80 சண்டை சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிடிபட்ட அனைவருக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com