2030 காமன்வெல்த் போட்டிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் தயாராகும் அகமதாபாத் - குஜராத் துணை முதல்வர்

இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்கும்.
Harsh Sanghavi
Published on

விளையாட்டு மேம்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மேற்கொண்டு வரும் உந்துதலைப் பாராட்டிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக கூறினார்.

மேலும், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்று வரும் வேளையில், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த மத்திய அரசு விளையாட்டுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமருக்கு நன்றி:

"பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒருபுறம், 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டின் வீரர்கள் பதக்கங்களுக்கு மேல் பதக்கங்களை வென்று வந்தனர். மறுபுறம், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளார். இது அவரது அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது," என்று ஹர்ஷ் சங்கவி கூறினார்.

2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக அகமதாபாத் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருவதாகவும், இந்த வசதிகள் குஜராத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

சர்வதேச தரம்:

இதுகுறித்து பேசிய அவர், "இந்திய இளைஞர்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த, சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை அகமதாபாத் முழுமையாக தயார் செய்து வருகிறது. இந்த உள்கட்டமைப்பு அகமதாபாத் அல்லது குஜராத் மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரும் தங்கள் கனவுகளை அடைய அகமதாபாத்தை தங்கள் இல்லமாகக் கருதலாம்," என்று சங்கவி கூறினார்.

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வரும் வேளையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளின் நூற்றாண்டு பதிப்பிற்காக, சர்வதேச தரத்திற்கு இணையான விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வசதிகளை உருவாக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

பல்வேறு பிரிவுகளில் இந்தியா தனது மிகச்சிறந்த செயல்பாடுகளில் ஒன்றை வெளிப்படுத்திய கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, ​​குஜராத் துணை முதலமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

உறுதியான பாரம்பரியம்:

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத் நடத்த இருக்கிறது. குஜராத் அரசு, இந்த நகரத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு தலமாக நிலைநிறுத்தி வருகிறது. இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பானது, சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும்.

உயர் செயல்திறன் பயிற்சி வசதிகள மற்றும் விளையாட்டு அரங்கங்களை உருவாக்குவதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நீடித்த பலன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது, இந்த பல்நோக்கு விளையாட்டு நிகழ்வுக்கு பிறகும் நீடித்து நிலைக்கும் ஒரு பாரம்பரியத்தை உறுதி செய்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com