டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: மத்திய அரசு

குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும், தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மொத்த உணவு தானியங்களில் 98 சதவீதம் தற்போது ஆதார் உறுதிப்படுத்துதல் மூலம் விநியோகிக்கப்படுவதால் கசிவுகள் குறைந்துள்ளன
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்: மத்திய அரசு
Published on

மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன.

இந்திய உணவுக் கழகத்தில் ஒதுக்கப்படும் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கான முறையும் உருவாக்கப்பட்டுள்ளது. விநியோகத்தைப் பொறுத்தவரை 80.6 கோடி பயனாளிகளைக் கொண்ட 20.4 கோடி குடும்ப அட்டைகளின் விநியோக நடைமுறை முழுவதும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையால் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும், தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆதார் இணைப்பு ஆகியவை ரேஷன் கார்டுகளின் போலிகளை நீக்குவதற்கு வழிவகுத்துள்ளன. 5.8 கோடி ரேஷன் கார்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

மொத்த உணவு தானியங்களில் 98 சதவீதம் தற்போது ஆதார் உறுதிப்படுத்துதல் மூலம் விநியோகிக்கப்படுவதால் கசிவுகள் குறைந்துள்ளன. தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சரியான பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இ-கேஒய்சி எனப்படும் மின்னணு முறையிலான வாடிக்கையாளர்களை அறியுங்கள் என்ற பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி 64 சதவீத பயனாளிகள் இ-கேஒய்சி (eKYC) (Electronic Know Your Customer) மூலம் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு இ-கேஒய்சி முடிப்பதற்கான செயல்முறை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நடைமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பயனாளிகள் பொருட்களை வாங்க முடியும். மேலும் போலி குடும்ப அட்டைகள் களையப்பட்டு வருகின்றன. இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

பயனாளிகளின் வசதிக்காக, நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் (ரேஷன் கடையில்) பயனாளிகளின் இ-கேஒய்சி வசதியை செய்துள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com